Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 3 December 2011

சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் இந்தியர்களின் பட்டியலை அடுத்த ஆண்டு வெளியிடுவேன்

இந்தியர்கள், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் சுமார் ஸி70 லட்சம் கோடி கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இதனிடையே இந்தியர்கள் உட்பட சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி உள்ளவர்களின் பட்டியலை ஒரு சுவிஸ் வங்கியின் முன்னாள் ஊழியரான ருடால்ப் எல்மர், விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு வழங்கி உள்ளார். அந்த பட்டியலை விக்கிலீக்ஸ் இன்னும் வெளியிடவில்லை. எனினும், அது கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு கிடைத்த போதிலும், அதை அரசும் வெளியிடவில்லை.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ், வீடியோகான்பரன்ஸ் மூலம் பேசினார். அப்போது, ‘கறுப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டியல் எப்போது வெளியிடப்படும்’ என கேட்டபோது அவர் கூறியதாவது:
கறுப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டியலை வழங்கிய ருடால்ப் எல்மர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, இப்போது இதுபற்றி விளக்கமாக கருத்து கூற முடியாது. எனினும், அடுத்த ஆண்டு பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். விக்கிலீக்ஸ் இணையதளம், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அந்நாட்டு அரசுடன் பரிமாறிக் கொண்ட பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதன் நிறுவனர் அசாஞ் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெறுகிறது. அவர் இப்போது பிரிட்டனில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.