ரஜினியின் ‘ராணா’ படத்திலிருந்து விலக முடிவு செய்திருக்கிறார் தீபிகா படுகோன். இதனால் பட குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ராணா’. ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியபோது ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சிங்கப்பூருக்கு சென்று தீவிர சிகிச்சை பெற்று திரும்பினார் ரஜினி. இதற்கிடையில் தீபிகா படுகோன் அளித்த பேட்டியில் ‘ரஜினிகாந்த் எப்போது குணம் அடைந்து ‘ராணா’வில் நடிக்கிறாரோ அப்போது கால்ஷீட் ஒதுக்கி தருவேன்’ என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. புதிய காட்சிகள் பற்றி ரஜினியுடன் தினமும் ஆலோசித்து வருகிறார் இயக்குனர் ரவிகுமார். நவம்பரில் ஷூட்டிங் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் தீபிகா படுகோன் அப்படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி தீபிகா கூறும்போது ‘‘ராணா பட ஷூட்டிங் எப்போது நடக்கப்போகிறது. அதற்கான திட்டம் என்ன என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வரவில்லை. கடைசியாக எனக்கு வந்த தகவல், ரஜினி குணம் அடைந்து வருகிறார்.
ஓய்வில் இருக்கிறார் என்பதுமட்டும்தான். அதன்பிறகு எந்த தகவலும் வரவில்லை. மீண்டும் என்னுடைய கால்ஷீட்டை அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை கேட்கவும் இல்லை, நான் ஒதுக்கித் தரவும் இல்லை’’ என்றார்.
தீபிகாவின் இந்த திடீர் அறிவிப்பால் ‘ராணா’ பட குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்தடுத்து இந்தியில் அவர் புதுப்படங்களை ஒப்புக்கொண்டி ருப்பதால் ‘ராணா’ படத்தில் தீபிகா நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது.