கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல்களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநிலையில் இல்லை.
ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது எளிதாக கிடைத்து விடும் என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி யாரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை என்பதை உணரும்போது, வாழ்க்கையே முடிந்து போய் இருக்கும். தவறுகளே செய்யாத மனிதர்கள் இல்லை.
அதை திருத்திக் கொள்ளும் முயற்சி தான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன் செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.
திருமணத்துக்கு முன்பு- திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு- பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அனேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது. விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! என்னதான் மனதளவில் அவள் தைரியமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய சமூக அந்தஸ்து குறைந்து விடும்.
அதற்கு தக்கபடி அவள் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்து போவாள். அப்போது தனக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தனக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வாள். கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டால், அந்த நேரத்தில் பேச்சை குறைத்துக் கொள்ளவேண்டும்.
தேவையற்ற பேச்சு பிரச்சினையை அதிகமாக்கும். அமைதியாக தெளிவான சிந்தனையோடு, சிக்கல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். விவகாரத்துக்கு முன் நிறைய யோசிக்க வேண்டும். முக்கியமாக அதற்கு பின்னால் வாழப்போகும் வாழ்க்கையை பற்றி யோசிக்க வேண்டும்.