மகள்களுக்கு வீட்டில் அதிக செல்லம் கொடுத்து பெற்றோர்கள் வளர்க்கிறார்கள். அதனால் அவர்கள் திருமணத்திற்கு பின்பு புகுந்த வீட்டில் உள்ள புதுப்புது உறவுகளோடு பொருந்திப்போக தடுமாறுகிறார்கள். அதே நேரத்தில் படிப்பதற்காகவோ, வேலை பார்ப்பதற்காகவோ ஒரு சில ஆண்டுகள் மகளிர் விடுதிகளில் தங்கும் பெண்கள், அங்கு கிடைக்கும் அனுபவ பாடங்களால் வாழ்க்கையில் எல்லோரையும் புரிந்துகொண்டு பொருந்தி வாழ கற்றுக்கொள்கிறார்கள்.
அவர்கள் ஈடுபடும் துறையிலும், மணவாழ்க்கையிலும் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் தற்போது பேசப்படும் புதிய விஷயம்! மகளிர் விடுதிகளில் நூற்றிற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருப்பார்கள். சாப்பிடும்போதோ, துணி துவைக்கும்போதோ, டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும்போதோ அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துதான் ஆகவேண்டும்.
இதனால் அவர்களுக்குள் பெரிய நட்பு வட்டம் உருவாகிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு துறையில் இருக்கிறார்கள். ஒரே கூட்டுக்குள் அவர்கள் வாழ்ந்தாலும், ஒவ்வொருவரும் வித்தியாசமான சூழலில் இருந்து வந்த, வித்தியாசமான குணாதிசயங்களை கொண்டவர்கள். ஆனாலும் சேர்ந்து வாழ்வதற்காக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்கிறார்கள்.
யார், எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள்? எந்தெந்த சூழலில் பெண்கள் எப்படி எப்படி நடந்துகொள்வார்கள்? சூழ்நிலைக்கேற்ப அவர்களிடம் எப்படி பழகவேண்டும்? என்பதை எல்லாம் அவர்கள் இங்கு கற்றுக்கொள்கிறார்கள். அதனால் மாமியார், நாத்தனார், புது வீட்டு உறவினர்களை எல்லாம் அனுசரித்து அவர்களால் வாழ முடியும்.
கல்லூரியில் எளிதாக படிப்பதற்கும், எதிர்காலத்தில் வேலைக்கு செல்வதற்கும்கூட இந்த விடுதியில் கிடைக்கும் வாழ்க்கை அனுபவங்கள் பெண்ளுக்கு கைகொடுக்கும். விடுதியில் தங்குத் பெண்கள் ஒவ்வொருவரும் தினமும் தங்கள் அனுபவங்களையும், பார்த்தவைகளையும், கேட்டவைகளையும் மனம் விட்டு விடுதியில் பேசிக்கொள்கிறார்கள்.
இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அப்பட்டமாக அப்படியே தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நல்லது எது, கெட்டது எது என்பது அவர்களுக்கு தெரியும். காதலில் மட்டுமல்ல எதிலும் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு விழுவதில்லை. பெண்கள் தனியாக விடுதியில் தங்கியிருப்பதால் அவர்கள் வேலைகளை அவர்கள்தான் செய்தாக வேண்டும்.
அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அவர்கள்தான் பொறுப்பு என்பதால், ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரித்துவிட்டது. பெற்றோர் அவர்களுக்கு கேட்கும்போதெல்லாம் பணம் அனுப்பினாலும், அவர்களே செலவு செய்வதால் பணத்தின் மதிப்பை உணருகின்றார்கள்.
எந்த இடத்தில் என்ன பொருள் மலிவாக கிடைக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். விடுதி வாழ்க்கையில் அம்மாவின் அருகாமை மட்டும் இவர்களுக்கு கிடைக்காமல் இருக்கிறது. ஆனால் அந்த குறையையும் எப்போதும் இவர்களுடன் இருக்கும் செல்போன்கள் தீர்த்து வைத்துவிடுகின்றன..
பெண்கள் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் விடுதி வாழ்க்கையில் கற்றுக்கொள்வதால், நல்ல மகளிர் விடுதிகள், `வாழ்வியல் பல்கலைக் கழகங்கள்' என்றால் மிகையில்லை!