புகையிலை பொருட்களுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வக்கீல் சதீஷ் சந்திரன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். புகையிலை பொருட்களால் மக்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் புகார் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த விஷயத்தில் கோர்ட் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் விசாரித்து, 8 வாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.