இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று இந்திய அணி தேர்வுக்குழுவின் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இலங்கையில் இம்மாதம் 18-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் அப்போட்டி தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறியது: இப்போதைய சூழ்நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிதான் வலுவானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே திறமையானவர்கள்.
இந்திய அணி ஏற்கெனவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது. எனவே அதே உத்வேகத்துடன் இந்த உலகக் கோப்பையையும் வெல்லும். கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவும், அவர்கள் அளிக்கும் உற்சாகமும் நமது வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் என்றார்.
விடைபெறுகிறார்: தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து, ஸ்ரீகாந்த் விரைவில் விடைபெற இருக்கிறார். இது குறித்து அவர் பேசியபோது, "20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்போது முன்னாள் தலைவராக இருப்பேன். நான் இந்திய அணி தேர்வுக்குழு தலைவராக இருந்த காலகட்டத்தில் நமது அணி உலக சாம்பியன் ஆனது மிகவும் திருப்தி அளித்தது. எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன் என்ற மனநிறைவும் ஏற்பட்டுள்ளது.
எவ்வித பாரபட்சமும் இன்றி அணியின் வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வீரர்களைத் தேர்வு செய்தேன். நமது அணி டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 என அனைத்து போட்டிகளிலும் விரைவில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும்' என்றார் அவர்.