வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, ஆயுர்வேத சிகிச்சை அளிக்க, நடிகர் மம்முட்டி வழங்கிய, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள், சிவகாசி மருத்துவமனைக்கு வந்துள்ளது.விருதுநகர், முதலிப்பட்டி பட்டாசு ஆலையில், 5ம் தேதி நடந்த வெடி விபத்தில், 38 பேர் பலியாகினர். விபத்தில் காயமடைந்த 44 பேரில், 30 பேர், சிவகாசி, 14 பேர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.நடிகர் மம்முட்டி, தான் நடத்தும், "பதஞ்சலி ஹெர்ப்ஸ்' நிறுவனம் மூலம், காயமடைந்தவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்க, "அக்னி ஜித்து' என்ற மருந்தை, 25 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு, "அக்னி ஜித்து' மருந்து, நேற்று, 30 பாட்டில்கள் கொண்ட ஒரு அட்டை பெட்டியில் வந்தது. ஒரு பாட்டிலின் விலை, 500 ரூபாய்; மொத்த மதிப்பு, 15 ஆயிரம் ரூபாய்.மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் கூறியதாவது: ஆயுர்வேத களிம்பு மருந்து, 30 பாட்டில்கள் வந்துள்ளன. இங்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு டாக்டர் இல்லை. திருநெல்வேலி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இருந்து, டாக்டர் ஒருவரை அனுப்பி வைக்க கோரியுள்ளோம். அவர்களும் திங்கள் கிழமை (செப்., 10) டாக்டரை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளனர். டாக்டர் வந்த பின் தான், காயமடைந்தவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.