நாகர்கோவில்: தமிழக அரசுக்கு வருமானம் வரக் கூடிய துறைகளில் டாஸ்மாக் துறையும் ஒன்று. மாநிலம் முழுவதும் உள்ள 6500 டாஸ்மாக் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வரை வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு 2 முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் 3 வது முறையாக உயர்த்த திட்டமிடப்பட்டது. அதன்படி இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, ரம், ஓட்கா ஆகிய பிராண்ட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. குவார்ட்டர் பாட்டில் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், ஆஃப் பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரையிலும், ஃபுல் பாட்டில் ரூ.40 முதல் ரூ.45 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இன்று காலை 10.30 மணிக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. இந்த புதிய விலை விவரம் குறித்த பட்டியல் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தாலும் விற்பனையில் எந்தவிதமான மந்த நிலையும் இல்லை என்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.