ஆரம்பத்தில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்துவந்த கூத்துப்பட்டறை நடிகர் விதார்த்துக்கு 'மைனா' ஒரு மாபெரும் திருப்புமுனையைக் கொடுத்தது என்றால் மிகையில்லை. அடுத்து வந்த ஏவிஎம்மின் 'முதல் இடம்' விதார்த்தை சில இடங்கள் பின்னோக்கி நகர்த்தி விட்டது என்பதை நன்கு உணர்ந்தே இருக்கிறார்.
''எனது அடுத்த ரிலீஸ் படம் 'கொள்ளைகாரன்'. சீனுராமசாமி, மற்றும் குள்ளநரிக்கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி ஆகியோரிடம் பணியாற்றிய தமிழ்ச்செல்வன் இந்தப்படத்தை இயக்குகிறார்.
'மைனா'வுக்குப் பிறகு எனக்கு இது மாபெரும் வெற்றிப்படமாக அமையும். சிலர் கதையை நன்றாக சொல்லிவிட்டு அதை படமாக எடுக்கும்போது கோட்டைவிடுகிறார்கள். ஆனால் தமிழ் சார் கதை சொன்னதைவிட பிரமாதமாக ஷூட் பண்ணுகிறார். 'கொள்ளைக்காரன்' கண்டிப்பாக மக்கள் மனதை கொள்ளை அடிப்பான் என்று யதார்த்தமாக பேசுகிறார் விதார்த்.