இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் சுமுகம் அடைவதற்காக, இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களில், 12 பொருட்கள் மீதான தடையை பாக்., நீக்கியுள்ளது.காஷ்மீர் உள்ளிட்ட அரசியல் பிரச்னைகள் காரணமாக, இந்தியா உடனான வர்த்தகத்தில், பாக்., சுணக்கம் காட்டி வந்தது. இருப்பினும், பல்வேறு வர்த்தக நலன்களை அளிக்கும் மிக வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை இந்தியா, 1996லேயே பாகிஸ்தானுக்கு அளித்து விட்டது.இருதரப்பும், தொடர்ந்து இதுகுறித்து நடத்திய பேச்சுவார்த்தையில், இருதரப்பு வர்த்தகமும், சுமுகமாக நடக்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம், இந்தியாவுக்கு மிக வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்க, பாக்., முடிவு செய்தது. இச்செய்தியில், குழப்பம் ஏற்பட்ட போதிலும், பாக்.,வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர், அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், வர்த்தகம் சுமுக நிலை அடைவதற்காக, சில பொருட்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என, பாக்., வர்த்தக அமைச்சகம், அந்நாட்டு உயர் அமைப்பான பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டியிடம், கோரிக்கை விடுத்தது.இதுகுறித்து, நேற்று முன்தினம் கலந்தாலோசித்த கமிட்டி, இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில், 12 பொருட்கள் மீதான தடையை நீக்க ஒப்புதல் தெரிவித்தது. இத்தகவலை, வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தடை நீக்கப்பட்ட பொருட்களில், இயந்திரங்கள், தோல் மற்றும் ஜவுளிக்கான மூலப் பொருட்கள் ஆகியவை அடங்கும்